பெண்மொழியும் காவலும்

இலக்கியப் பிரதிகளை உருவாக்குபவர்கள் கடவுள்கள் அல்ல தவறுகளைச் செய்வதற்கும் அவற்றுக்கான காரணங்களை அடுக்குவதற்கும். தமிழிலக்கியப் பிரதிகளை கவனத்தில் கொள்வோமெனில் இன்னும் மானுடம் மனம் திறந்து பேசக்கூடிய எத்தனையோ செய்திகள அப்படியே இருக்கின்றன.

தலித் பிரச்சினைகளை பிரதிகளாக்கிய காலங்களிலும் அது தீவிர உச்சகட்டத்தை அடைந்த நேரத்திலும் தற்போது அது தேவையற்றதென கருதப் படும் காலத்திலும் இன்னும் காத்திரமாக பேசப்பட வேண்டியவை அப்படியேதான் இருக்கின்றன. கதைகளாக்கப் பட வேண்டிய தலித் வாழ்வுகளும் அதன் எதிர்பாராத தீவிரமும் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன. அதைவிட இன்னும் முக்கியமானது என்னவென்றால் தலித் எழுத்தாளர்களே அதன் தீவிரம் தற்போது தேவையற்றது என்று கூறும் சூழல்தான்.

இதே அளவுகோலை வைத்துக்கொண்டுதான் பெண் ஆக்கவாளிகளையும் நோக்க வேண்டியுள்ளது. புதிராக இருக்கின்றாள் பெண் என்னும் அங்கலாயிப்பில் புரியவில்லை பெண் என்று சொல்லி அவர்களைப் பூடகமாக வைத்திருந்த சமூக கோட்பாட்டு அரண்களை யெல்லாம் உடைத்து தன்னை பிரகடனப்படுத்தியது பெண்மொழி எழுத்து.

அது அப்படி தன்னை உடைத்துக் கொண்டு வெளிவந்தபோது எல்லாமே தகர்ந்துபோயின. எந்தெந்த உறுப்புகளை மையமாக வைத்து ஆண் ஆக்கங்கள் பெண்ணைப் பார்த்தனவோ அவை திறக்கப்பட்ட பாசறையிலிருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களாக மாறின. அவை காற்றின் எல்லா திசைகளிலும் கல்ந்து பெரும் வீச்சுடன் நெருங்கின. அதிர்ந்த ஆண் ஆக்கங்கள் அவற்றை எதிர்த்தன. கூக்குரல்கள் எழுப்பின. ஆனால் அவற்றையெல்லாம் மீறி பெண்மொழி காலமாக மாறிவிட்டது. அதனை காலத்திலிருந்து யாரும் பிரிக்கமுடியாது.

ஆனால் லீனா மணிமேகலை என்னும் கவிஞரின் கவிதைகள் ஆபாசமாக இருக்கின்றன என்று இந்துத்துவ இயக்கங்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்திருக்கின்றது என்று ஒரு செய்தி அடிபடுகிறது. அது உண்மையாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அப்படி உண்மையாக இருக்கும் பாட்சத்தில் அதில் என்னவிதமான நியாயம் இருக்கின்றது என்று தெரியவில்லை. அதுவும் அது  குறித்து கேள்விகள் கேட்கும் தாத்பரியங்கள் எதுவும் இந்துத்துவ அமைப்புகளுக்கு இல்லை.

இந்துக் கோவில்களில் உள்ள ஆபாசமான சிலைகள். இந்துக்கடவுளர்களின் ஆபாச புராணங்கள் இதெல்லாம் எப்படி நியாயப்படுத்தப்படுபவனாக இருக்கக் கூடும்.

எழுத்து என்பது அவருடைய உரிமை. அவரின் துன்பங்களை அவஸ்தைகளை எழுச்சியை எழுதுவதற்கு அவருக்கு உரிமை உண்டு. அப்படி இருக்கும்போது அது ஆபாசம் ஆபாசமில்லை நியாயத்தீர்ப்பு வழங்க யாருக்கும் உரிமை இல்லை.

எழுத்துதான் சமூகத்தை மாற்றி இருக்கின்றது. அதனால்தான் இந்துத்துவ இயக்கங்கள் இதை தூக்கிப் பிடிக்கின்றன. தீட்டு என ஒதுக்கி வைத்தவைகள் எல்லாம் பாடுபொருளாக மாறிவிட்டன. தடைகளைத் தகர்க்கின்றன. சமூகத்தினை கட்டுடைக்கின்றன. அதனால் தாங்கல் அமைத்துவைத்துள்ள சாதிய அடுக்குகள் சரிந்துவிடுகின்றன அதனால் தங்களின் வியாபாரம் நடக்கவில்லை என்பதுதான் அவர்களைன் இந்த எரிச்சலுக்குக் காரணம். கவலைப் படாதீர்கள் மதவாதிகளே நீங்கள் நினைக்கின்ற எதுவும் இங்கு நடக்காது. தீட்டு என்று நீங்கள் ஒதுக்கிவைத்தவர்கள் எல்லாம் எழுத்தை ஆயுதமாகத் தூக்கிவருகிறார்கள். உருட்டப்பட்ட உத்ராட்சைகளில் உலகை ஆளாலாம் என்ற கனவினை விட்டுவிடுங்கள் தீட்டுத்துணியென நீங்கள் சொன்ன அதுதான் புத்தகங்களாகவும் விடுதலைக்கான கருவியாகவும் பயன்பட வருகின்றன. ஒட்டுமொத்த விடுதலைக்காக பீ வாரிய கரண்டியும் கூடையும் செருப்புத்தைத்த ஊசிகளும் பேனாக்களாகிப் பேசுகின்றன. சேரிகள் பாசறைகளாகின்றன. பாடங்கள் ஊட்டப்படும்

நன்றி :ராஜன்

புத்தகக் கண்காட்சி : புத்தாக்கம் செய்யும் தளம்

எப்படியாவது கடைசி( 10/01/10) நாளன்றாவது புத்தகக் கண்காட்சியைப் பார்த்து விடவேண்டும் என்று மனது துடித்தது. கடந்த வாரம்(03/01/10) ஞாயிறன்றே புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதாகத்தான் திட்டம். ஆம்பூரிலிருந்தே இமைகள் தோழர்கள் விஜயராஜனும் ஞானவேலும் ஆம்பூரின் அழகிய தமிழ்மகன் தேவாவும் நானும் செல்வதாகத்தான் திட்டமிட்டோம். இவர்களுடன் செல்வது என்பது மிகவும் பிடித்தமான விஷயம். என்னவென்றால் இலக்கியம் குறித்தும் சினிமா குறித்தும் பேசிக்கொண்டே போகலாம். சாப்பாடி பிரச்சினை இருக்காது. வீட்டிலிருந்தே சாப்பாடு கட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள். கண்டிப்பாக அதில் புளி சோறு இருக்கும் முட்டையுடன். படிக்குங்காலத்தில் எங்காவது சுற்றுலா செல்வது போன்ற உணர்வினைத் தரவல்லது அது. புத்தகக் கண்காட்சியிலும் எந்தெந்த புத்தகங்களை வாங்கலாம் என்றெல்லாம் ஆலோசனை வழங்குவார்கள்.

இதில் என்னவாயிற்று என்றால் தேவா அச்சகத்தில் வேலை வந்துவிட்டது என்று நின்றுவிட்டார். திடீரென்று என்னுடைய அன்பிற்குரிய பேராசிரியர் அய்.இளங்கோவன் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது அவரைப் பார்க்க வேண்டும் என்பது முக்கியமானது எனவே நானும் போகவில்லை. நண்பர்கள் விஜயனும் ஞானவேலும் மாத்திரமே போயிருந்தார்கள். அங்கிருந்து நேரிடையாக வர்ணனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுடனே புத்தகக் கண்காட்சியில் இருந்ததைப் போன்று இருந்தது.அடுத்த வாரம் போய்விட வேண்டுமென்று முடிவெடுத்தேன்.

அதனால் கடைசி நாளன்று கிளம்பிவிட்டேன். லால்பாக் தொடர்வண்டியில் ஏறி சென்னை அடைந்து தலித் முரசு அலுவலகத்திற்கு அங்கு ஆசிரியரை சந்தித்து மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டு புத்தகக் கண்காட்சிக்கு வந்து சேர்ந்தபோது மூன்று மணி. தொடர்வண்டியில் வரும்போது தம்பி சோழனுக்கு சொல்லியிருந்தேன். தம்பி சோழன் இயக்குனராவதற்கு முயர்சி செய்துகொண்டிருக்கும் தோழர். எங்கள் ஊர்க்காரர். கூத்துப்பட்டறையின் முக்கியமான நடிகராக இருந்து இப்போது வெளியேறி பயிற்சியாளராக இருக்கின்றாஅர். அதிகம் வாசிக்கக் கூடிய தம்பி. இந்தப் புத்தக கண்காட்சியில் ஏறக்குறைய 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கின்றார் என்றால் புரியும் அவருடைய வாசிப்பு தாகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்னும் அவரின் ஆர்வம் அவரை ஆசானாக மாற்றிக்கொண்டுள்ளது. சோழனின் வளர்ச்சி எங்கள் நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

பேராசிரியர் அய்.இளங்கோவன் எழுதிய நூலின் ஆங்கிலப் பதிப்பை எடுத்துக்கொண்டு புத்தகக் கண்காட்சியில் வைக்க அந்த பிரமாண்டத்துள் நுழைகிறேன். கருப்புப் பிரதிகள் நண்பர் நீலகண்டன் கொள்கை வழி பதிப்பாசிரியர். கண்டதையும் போட்டு பணம் பார்க்க அவர் எண்ணியதே கிடையாது. மாறாக அம்பேத்கர் பெரியார் மற்றும் விடுதலைக் கருத்தியலை உயர்த்திப் பிடிக்கும் நூல்களையே அவர் பதிப்பிப்பார். அவருடைய கடைக்குத்தான் நான் போகவேண்டும். உள்ளே நுழைந்ததும் அவர்தான் கண்ணில்பட்டார். அவரோடே கருப்புப் பிரதிகளுக்குச் சென்று புத்தகத்தை ஒப்படைத்தேன். அங்கே தோழர்கள் கவின்மலரும் சுகிர்தராணியும் வந்தனர். ஆளுக்கொரு வணக்கத்தைப் போட்டு, அப்போதுதான் வந்த விவரத்தையும் சொன்னேன். போய் அனைத்தையும் பார்த்துவருவதாகச் சொல்லிவிட்டும் போனார் சுகி. நானும் கவினும் புத்தகக் கண்காட்சியில் கடைகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். பெரிய பெரிய புத்தகங்கள், அழகழகான அட்டை வடிவமைப்புகள் எல்லா புத்தகங்களயும் வாங்கிவிடவேண்டும் என்று மனம் ஆவலாதித்தது. ஆனால் வழக்கமாக நமக்கிருக்கும் பொருளாதார நெருக்கடி நம்மை கையைப் பிடித்து இழுத்துக்கொண்டது. நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் கவிதைகளயே வாங்கவேண்டும் என்னும் முடிவோடுதான் சென்றிருந்தேன்.

கவினைக் கேட்டதற்கு பெரிய பெரிய புத்தகங்களை வானகச் சொன்னார்கள். அது நம்மால் ஆகாது என்று ஏற்கெனவே எடுத்த முடிவினை செயற்படுத்த ஆரம்பித்து கவிதைகளை வாங்கினேன். உயிர்மை விளம்பரப்படுத்தியிருந்த சில்வியா பிளாத் போன்றோரின் தொகுப்புகள் வராதது வருத்தமாக இருந்தது.வம்சி புத்தகங்கள் வடிவமைப்பில் புதிய பொலிவினைப் பெற்றிருந்தது. அங்கே கைக்கு அடக்கமாக ஒரு அழகிய புத்தகத்தை வாங்கினேன். வித்தியாசமான அமைப்புடன் இருந்த கிரியா வுக்குப் போனேன். அங்கே திரு.ராமகிருஷ்ணனை சந்தித்தேன். முன்பு ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் பணியாற்றிய போது அவரை சந்த்தித்து இருந்தேன். அதற்குப் பிறகு இப்போதுதான் பார்த்தேன். அவர்களும் கைக்கு அடக்கமாகத்தான் புத்தகங்களை வடிவமைத்து இருந்தனர். ழாக் பிரேவரின் சொற்கள் தொகுப்பை வாங்கினேன். உயிர்மைக்கு வந்து சில கவிதை தொகுப்புகளை வாங்கினேன். அங்கே எஸ்.ராமகிருஷ்ணனும்,சாருவும் புத்தகங்களில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தனர். எஸ்.ராமகிருஷ்ணனின் சட்டைப் பையில் விஐபி அட்டை வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அது சொல்லவில்லையென்றாலும் அவர் விஐபி தானே!
நேரம் போதவில்லை மறுநாள் பள்ளிக்குப் போகவேண்டிய இருந்தது. சோழனை அனுப்பிவிட்டு தோழர் ஆர்.ஆர்.சீனிவாசனின் மின்னஞ்சல் அழைப்பிற்காக பூவுலகின் நண்பர்கள் அரங்குக்குச் சென்றேன். மிக நல்ல முயற்சி. சுற்றுச்சூழலுக்காகவும் மக்களின் வாழ்வுக்காகவும் அவர் எடுக்கும் படங்கள் மட்டுமல்ல, முயற்சிகளும் தோள் கொடுக்கப் பட வேண்டியவை. வாங்கி வந்திருக்கும் புத்தங்களை இன்னும் படிக்க ஆரம்பிக்க வில்லை. புத்தகக் கண்காட்சி உண்மையிலேயே இவ்வாண்டு எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்து இருக்கின்றது என்றால் பொய்யில்லை.

திசநாயகா

தீர்மானமானதாக இருக்கின்றது எல்லாம்
உண்மையின் மெய்பிம்பங்களை மறைக்கும்
மாயபிம்பங்களின் தோற்றங்கள் உட்பட
யாருக்கும் தெரியாமல் கொல்லும் தந்திரமும்
எல்லாவற்றையும் சூறையாடும் குற்றங்களும்
வெளிச்சத்திற்கு வருதல் சாத்தியமாகும்
உண்மையின் சொரூபத்தைத்
தோலுரித்து
ஒரு பழத்தைப் போல தருதல்
அதிகாரத்தின் தொண்டையில் முள் ஏற்றுதல்
கத்தும் அதன் வலிமையில்
ஒரு வதை என்பதோ
ஒரு வலி என்பதோ
ஒரு கைது என்பதோ
ஓர் உயிர் என்பதோ
நீதியின் அழிவு என்பதோ
எதுவுமற்று
முன்பே தீர்த்த தீர்ப்பின் கொழுந்துகளில்
எரியும் இருபது ஆண்டுகளின்
திசைகளில்
புதைக்கப்படுகின்றன உண்மையின் வாய்கள்
அவை
தமிழென்றாலும்
சிங்களமென்றாலும்

டேவிட்.டி.பக்: படைப்பின் மீதான காதலன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின் அவர்கள் அமெரிக்காவுக்கே திரும்ப சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழை மறக்க முடியாத தீராத அன்புகொண்ட டேவிட் எழுபதுகளில் மீண்டும் தமிழகம் வந்திருக்கின்றார். மதுரையில் ஈராண்டுகள் தங்கி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லித்தந்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் தமிழையும் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுள்ளார்.

தமிழின் மேல் மிக்க பற்றுடையவராகத் தன்னை மாற்றிக்கொண்ட டேவிட் தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார்.தமிழின் முக்கிய இலக்கியங்கள் பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்துள்ளார் டேவிட். அதில் மிகவும் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி.

ஒருமுறை டொராண்டாவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பாண்டிச்சேரி பிரஞ்ச் நிறுவனத்தின் கண்ணன் அவர்களைச் சந்தித்த டேவிட் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் ஒன்றைத் தர அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி இருக்கலாம். தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் தமிழில் மிகமுக்கியமான நூல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு படைப்பாளி தன் அனுபவங்களைப் பற்றி கூறி அவரின் படைப்புகளில் சிலவற்றை சேர்த்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இருந்த எல்லா படைப்பாளிகளையும் சந்திப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். தலித்முரசு ஆசிரியர் திரு.புனித பாண்டியன், முற்றுகை ஆசிரியர் திரு.யாக்கன் ஆகியோரைச் சென்னையில் சந்தித்துப் பேசிவிட்டு பிறகு என்னைப் பார்க்க ஆம்பூருக்கு வந்திருந்தார்.

06.09.09 ஞாயிறு அன்று காலை பிருந்தாவன் விரைவு தொடர்வண்டியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். நம்முடைய சூழ்நிலையை அப்படியே தனதாக்கிக் கொள்ளக்கூடியவராக இருந்தார். அறுபதைக் கடந்தவர்.ஆனால் மிகவும் சுறுசுறுப்பானவர். என்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆம்பூரைச் சுற்றிக்காட்டினேன். பிறகு கஸ்பாவிற்கு வந்தோம். கொஞ்ச நேரம் தூங்கினார். பிறகு என்னுடைய பெற்றோர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன். எங்கள் தெருவில் அப்போது சிறுவர்களும் பெரியவர்களும் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் அவரும் கலந்துகொண்டார்.தெருவில் அமைர்ந்து அவர் பிள்ளைகளோடு தாயம் விளையாடியது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே வியப்பு. கூடுதலாக என்னவென்றால் அவர் பேசிய தமிழ்.அது அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

பிறகு மீண்டும் ஆம்பூரை சுற்றினோம். எங்கள் தலித் பகுதியின் நாட்டாண்மை திரு.வெங்கடேசனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.

‘இவர் எங்கள் சேரியின் தலைவர்’

’ஓ.. அப்படியா! வணக்கம்’ என்று கைகொடுத்தார் டேவிட்.

’ஐ யாம் ப்ரெசிடெண்ட்’ என்று சத்தமாக ஆங்கிலத்தில் கூறினார் எங்களூர் தலைவர்.

உடனே டேவிட் ’நாட்டாமை’ என்று சொன்னார். ஒரு நிமிடம் உறைந்த்ப் போனார் எங்களாவர்.

அடுத்து ஒரு பிரியாணி கடைக்குப் போய் மாட்டிறைச்சி பிரியாணி ருசி பார்க்கலாம் என்றேன். ஒரு பிளேட் வாங்கி கொஞ்சம் சாப்பிட்டார். அதன் ருசி மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் சொன்னார். முழுமையாக சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் அழகியபெரியவனின் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவது என்று திட்டம். அதனால் நல்ல பிரியாணியையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பிறகு நேராக அழகிய பெரியவனின் வீட்டிற்குச் சென்று அங்கு அவருடன் உரையாடிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் சாப்பிட்டோம். அழகிய பெரியவனின் துணைவியார் மிகச்சிறப்போடு அன்புகலந்து சமைத்திருந்தார். மிக அருமையான சாப்பாடு. அங்கிருந்து பாலூர் என்னும் தலித் கிராமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்தை மையமாக வைத்து அழகிய பெரியவன் கதை ஒன்று எழுதியிருந்தார். அந்த கிராமத்தைப் பார்த்துவிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களுடன் உரையாடிவிட்டு திரும்பினோம். வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தோம். ஆம்பூரில் அய்ந்து மணிக்கு பிருந்தாவன் பிடித்தால் சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து வேகமாக வந்து டிக்கெட் வாங்கினோம். ஒரு மணிநேரம் மிகவும் தாமதமாக வந்தது அந்தத் தொடர்வண்டி. ஆம்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு பேசினோம். அவர் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் புத்தகத்தை மொழிபெயர்க்கப் போவதையும்  அதற்காக அவர் பெங்குவின் நிறுவனத்தை அணுக இருப்பதையும் கூறினார். ஆம்பூர் மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும் கூறினார். வானத்தில் மேகம் சூழ்ந்தது. மழை தூறியது. டேவிட் தன் பையில் குடை வைத்திருந்தார். மழைக்குப் பிடித்துகொண்டார். எனக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றேன். தனக்குப் பிடிக்காது என்றார். தொடர்வண்டி வந்தது. அன்போடு விடை கொடுத்தேன்.

நீக்கப் படாத அவை குறிப்புகளும் ஆதவனின் குறைந்த ஒளியும்

யாழன் ஆதி

துரையில் நடந்த கடவு கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடந்த உரையாடலை வாசித்து முடித்தபின் மிகவும் அயர்ச்சி அடைந்தேன். ஆதவனின் பேச்சும் அவரின் பதில் கடிதமும் அவரின் மதிப்பை (இதற்கு கூட ஆதவனால் பகடியாக ஏதாவது கூறமுடியும். எ.கா. உம் மதிப்பு ஒண்ணும் மசுர வளர்க்காது) வெகுவாக குறைக்கிறது என்றே சொல்லவேண்டும். உத்தபுர சுவர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த செயல்பாடுகளை எழுத்தில் வடித்து தமிழகத்தில் சாதி ஒழிக்க வந்த ஒரே இயக்கம் அதுதான் என்பதற்காக தலித் முரசு போன்ற இதழ்களையெல்லாம் கூட அவர் விடவில்லை என்பது மிக முக்கியம். தன் கட்சிக்கு இவ்வளவு விசேஷமாய் அவர் உண்மையாக இருந்தார். ஆனால் அவரின் கட்சி உத்தபுர சுவரை சுட்டுத்தள்ளுவேன் என்று சூளுரைத்த?! ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருகைகளையும் கட்டிக்கொண்டு மேடையில் சிலையாட்டம் நிற்க வைக்கப்பட்ட மோகன் குறித்தெல்லாம் அவரால் பகடி செய்யமுடியவில்லை. அந்த அம்மா வேறு எப்படியாவது ஈழத்தை வாங்கித்தந்து விடுவேன் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும்போதும் பேசாமல் பேன் பார்க்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

அவரைப்போல அதிரடியாக நையாண்டி பேச நமக்கு வராது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக விடுதலைக்காகப் போராடும் மக்களை இவ்வளவு இழிவுப் படுத்தவேண்டும் என்னும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று தெரியவில்லை. வால்பாறைக் கூட்டத்தில் யவனிகாவின் தொகுப்பைப் பற்றி பேசிய மதிவண்ணன் சர்வதேச ஒடுக்குமுறை குறித்தெல்லாம் எழுதுபவர்கள்  தங்களை சுற்றியிருக்கும் சாதி பிரச்சனைப் பற்றி எழுத வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கும் படுகொலைச் செய்யப்படும் தமிழரைக் காக்க பெரும் எழுத்தாளர்களாகிய நீங்கள் எல்லாம் எழுதக் கூடாதா என்று தமிழ்நதி கேட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். மதிவண்ணனின் கேள்விக்கு எதிர்கேள்வியாக நீங்கள் கங்காணிகளைப் பற்றி எழுதியிருக்கின்றீர்களா என்று மற்றவர்கள் கேட்டதையொத்துதான் பதில் அளித்து இருக்கின்றார் ஆதவன். தேசியத்திற்குள் ஒன்றுபட்டு இருக்கும் அவரின் மார்க்கிசியமே அவரை இப்படி பேசவைத்திருக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையினை நாம் பரப்பலாம்.

தமிழ்நாட்டிலிருந்துப் போன தமிழர்களை அங்கிருந்த பூர்வீகத்தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்? திண்ணியத்திலே பீ தின்ன வைக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்? அதற்கு இப்போது பதிலைச் சொல்லுங்கள் இல்லையென்றால் ஒன்றுபட்ட இலங்கையில் வாழுங்கள் முடிந்தால் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து உங்களுக்கு இலங்கையில் மார்க்சிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் கடலை மிட்டாய் வாங்கித்தருகிறோம் என்பார். தன்னுடைய தலித் அரசியலையே தன் எழுத்தில் போல கட்சியில் பேச முடியாமல் தவிக்கும் ஆதவனுக்கு அடுத்த தேர்தலில் ஓசூரில் நிற்க அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா?

சில விளக்கங்களைப் பெற விழைவதில் தவறேதும் இருக்காது என்றே நினைக்கின்றேன். இந்திய விடுதலைப் போர் நடைபெற்றபோது சாதி அற்றுப் போயா இது இருந்தது. அப்போது பொதுவுடைவாதிகள் இங்கு இல்லையா? அவர்கள் அப்போது தலித்துகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு எவ்விதத்தில் உறுதுணையாக இருந்தார்கள். தலித்துகளைக் கொடுமைப்படுத்திய பார்ப்பன பனியாக்கள் கைகளிலும் இந்துத்துவ வாதிகளிடத்திலும் இந்திய சுதந்திரம் தரப்பட்டபோது இவர்களுடன் இருக்க முடியாது தலித்துகளுக்கு தனிநாடு கொடுங்கள் என்று கேட்ட அம்பேத்கருக்கு ஆதரவாக அன்றைய பொதுவுடைமைவாதிகள் இருந்தார்களா? இன்னும் தீர்க்கப்படாத கொடுங்கனவாக இருக்கின்ற சாதிப் பிரச்சனைகளை ஒழிக்க இப்போது மிகவும் வளர்ந்துள்ள ஆதவனின் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அவர் கூறாமல் ஈழப்போரில் தங்கள் வாழ்வைக் கொடுத்துப் போராடும் போராளிகளை குறை கூறாமல் இருக்கவேண்டும்.

இன்றைக்குப் புலிகள் அழிக்கப்பட்டார்கள். வதைமுகாம்களாக மாறிப் போயிருக்கும் இலங்கை அரச முகாம்களில் தத்தளிக்கும் தமிழினத்தின் மக்களை எப்படி மீட்பது என்று சிந்திப்பது யார்? அவர்களுக்கான அரசியல் சார்ந்த உரிமைகளைப் பேசுவது யார்? ராஜபக்சேவும் அவருடைய அரசும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருக்கின்றது. தலித் பார்வையில் ஈழப்பிரச்சினையை அணுகவேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதே பார்வையில் ஆதவன் குடியிருக்கும் கோயிலான அவருடைய கட்சியைப் பார்க்கவேண்டும் என்றுதான் நாம் கேட்கிறோம். அதுதான் அவருடைய வார்த்தைகளுக்கான நியாய்த்தைப் பெற்றுத்தரும்.

ஈழப்பிரச்சினையையும் இங்குள்ள சாதித்தமிழரின் போக்கையும் நாம் முடிச்சிப் போடமுடியுமா என்ன? இங்குள்ளவர்கள் ஈழப்பிரச்சினைய அரசியலின் பகடைக்காயாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது ஆதவன் போன்ற அறிவுசாலிகளுக்கு தெரியாதா என்ன?

ஈழத்தில் சாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. தலித் படைப்புகளைத் தந்த டேனியேலின் படைப்புகள் நமக்கு சொல்கின்றன எல்லாவற்றையும். ஆனால் அறுபது ஆண்டுகால பிரச்சனையினை அல்லது விடுதலைப் போரை எப்படி நம்மால் புறந்தள்ள முடியும். இந்திய விடுதலைக்கு தலித்துகள் பங்காற்றவில்லை என்று இப்போது இங்கே சிலபேர் கூப்பாடு போடுகிறார்களே அதுபோல் ஆகிவிடாதா? சரி புலிகள் அற்ற தமிழர்கள் இப்போது சிங்கள உழைக்கும் மக்களோடு இயைந்து வாழ்ந்திட இயலுமோ? அதற்கு ஆவணவற்றை ஆதவன் செய்வாரா? எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ ஞானசேகரனை தோற்கடித்து விடுவார் போலிருக்கின்றது ஆதவன்.

ஆதவன் மேலும் அவருடைய எழுத்துக்கள் மீதும் மாறாத பற்றும் நம்பிக்கையும் நாம் வைத்திருக்கின்றோம். அது தகர்ந்து போகும் அளவுக்கு சில நேரங்களில் அவருடைய செயல்கள் அமைந்துவிடுகின்றன. ஈழத்தமிழர் இப்படி கொல்லப்படுகின்றனரே என்று கேட்டால் அவர்களிடம் இருக்கும் சாதியைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படவில்லை என்கிறார். இது அவரின் பார்வை. அப்படி அவர் பேசியிருந்தால் நாம் எந்த விதமான கருத்தினையும் சொல்லல்  ஆகாது. ஆனால் அவர் தலித் பார்வை என்று அதை கட்டமைக்கின்றபோது ஒட்டுமொத்த தலித்துகளின் நிலையா அது என்பது கேள்வியாக இருக்கின்றது. இத்தகைய கொடும் படுகொலையினைச் செய்த ராஜபக்சேவை அவர் ஒரு வார்த்தைகூட அவர் விமரிசிக்கவில்லை. அதற்குத் துணைபோன இந்தியாவின் சதியினை அவர் பேசவில்லை. பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து தன் ஆக்கங்களை வேண்டாம் ஒரு பேச்சாகக்கூட அவர் பிரசுரிக்கவில்லை. ஆனால் புலிகளைத் திட்டுவதும் அவர்களின் அரசியலை விமரிசிப்பதும் தன்னுடைய முழுமுதல் கடமையாகக் கொண்டிருக்கின்றார். ஈழத்தில் இருக்கும் சாதிய படிநிலையை வைத்துக் கொண்டுப் பார்த்தாலுமே யார் இப்போது ஈழத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்? இலங்கை அரசு நடத்தும் முகாம்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் யார்? யாரெல்லாம் தன்னுடைய மண்ணைவிட்டு வரமுடியாத சூழலில் இருக்கின்றார்களோ அல்லது அகதிகளாக உலகநாடுகளில் அலையாமல் தன் மண்ணிலேயே இருந்து கடைசிவரை பார்த்துவிடுவது என்று நினைக்கும் விளிம்பு நிலை மக்கள்தானே? அவர்களை கொத்தணி குண்டுகளையும் வேதி குண்டுகளையும் போட்டு கொன்ற கொடுமையைப் பேசமுடியவில்லை என்றால் தலித் விடுதலையினை மட்டும் எதை வைத்துப் பேசுவது என்பது நமக்கு சரியாக விளங்கவில்லை.

சாதியையும் அதன் வேரான இந்து மத்த்தையும் எதிர்க்காமல் புரட்சிபேசும் அவருடைய கட்சி சாதி மலிந்துப் போய் கிடக்கும் இந்தியாவில்தான் நடக்கின்றது. பாட்டாளி வர்க்கபுரட்சியையும் உழைக்கும் மக்களின் ஆட்சியையும் கொண்டுவருவது ஆகாது. கட்சியின் முக்கிய வேலை திட்டமாகவே சாதி ஒழிப்பை நிகழ்த்திவிட்டு அப்புறம் வர்க்க புரட்சியை வைத்துக் கொள்ளலாம் என ஆதவன் அங்கு பேசமுடியுமோ என்றால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்னும் ஒன்றும் வேலைதிட்டங்களில் ஒன்று.

ஈழத்திலும் அதைவைத்து தானே பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில்கூட எத்தனையோ தலித்துகள் உயர் பதவிகளில் இருந்திருக்கின்றனர். அதை வழிநடத்தி இருக்கின்றனர். புலிகளின் அரசியல் தவறு என்றால் உலகத்திலிருக்கும் இத்தனை கோடி தமிழர்கள் அதை எப்படி ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தங்களில் அதை நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் அல்லது தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு விடுதலை இயக்கத்தையோ அல்லது அது போராடும் தேசிய விடுதலையினையோ சாதியின் பேரால் கொச்சைப் படுத்துதல் ஆகாது. அது தலித் பார்வை இல்லை. ஒடுக்கப்படுகின்ற மக்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விடுதலைக்காக பேசுவதே தலித்தியம். அது விடுதலைக்கான கருத்தியல்.

புரட்சியாளர் அம்பேதகர் கருதுவதைப் போல தலித் விடுதலை என்பது பிற்படுத்தப்பட்டவரின் ஒத்துழைப்பையும் சார்ந்த ஒன்றுதான். தலித் பிற்படுத்தப் பட்டவரின் ஒற்றுமையை அவர் விரும்பியதைப் போல ஈழத்தமிழர்களின் விடுதலையும் சாதி கடந்துதான் வரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. சாதியம் அது சார்ந்த பிரச்சினைகளயும்விட வாழ்தல் என்பதுவும் அதைவிட விடுதலை என்பதும் மிக முக்கியம்.

இன்றைய சூழலில் தமிழர்களின் நிலை என்ன? அங்கே நிலவும் சாதி இப்போது அதாவது புலிகள் அல்லாத தமிழீழத்தில் எப்படி சாத்தியமாகும். கோட்பாட்டளவிலே இங்கேயே இருந்துக்கொண்டு நாம் வாய்பேசுவதைவிட அல்லது நாட்டை விட்டு வெளியேறி சுகமாக அயல்நாடுகளில் வாழ்வோரைவிட ஈழத்திலே கிடந்து அழிந்துக் கொண்டிருக்கும் அவர்கள் தான் பேசவேண்டும். பின் இவர்கள் பேசி என்ன ஆகப்போகிறது?

வலித்தல்

அயர்ந்து தொங்கும் கிளையின் மீதொரு கூடு. வானை தன்னுள் வைத்து பாதுகாக்கிறது. கிளையின் நெய்தலில் கையாளப்பட்ட நுட்பம் கலைக்க காற்று மிகைகிறது. அடிமானத்தின் பள்ளத்தில் நீர் சேரசேர அது தனக்கானதை உறிஞ்சி கொடுக்கின்றது. மேகங்கள் வளரும் இடம் இப்போது கூடு. கூட்டைப் பற்றி கவலைப்படும் நீங்கள் கண்டிப்பாக அடுத்த கோடையில் வரும் மழையை தரிசிக்கலாம்

யாழன் ஆதி கவிதைகள்

1

மௌனத்தின் கூர்மையை

அறியாத உன் எத்தனிப்பு

படபடக்கும் ஒரு பட்டத்தைப் போன்றது

காற்றின் கைகள் கிழிக்கலாம் அதை.

2.

வெவ்வேறாய் காய்ந்த குளங்களில்

ஒன்றாய் குவிகிறது

சூரிய ஒளி.

3.

இரவின் குளிரை ஒப்படைத்துவிட்டு

செல்கிறேன்

என் கவிதைக்கான எழுத்துக்களை

நட்சத்திரங்களிலிருந்து பெறுகிறாய் நீ

இருப்பினும் சந்திப் பிழைகளைப் பற்றி

கவலைப்படுகிறார்கள் வாசகர்கள்

4.

எத்தனை வடிவங்களில் திசை மாறுகிறது

வாழ்க்கை

நீ கொண்டுவந்த தண்ணீரைப் போலவே.

5.

உனக்குத் தெரியாத எனக்கும்

எனக்குத் தெரிந்த உனக்கும்

என்ன இருக்கிறது

இடையில் இந்த இடைவெளியைத்தவிர.

6.

கிளாடிக்கு சொல்வதற்குமுன்

ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்

அதிக உயரமில்லாத இந்த மலைக்குன்றின்

பெயரையும்

என் அன்பினையும்.

அ.முத்துகிருஷ்ணன் வருகை

area

எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் ஆம்பூர் வந்திருந்தார். வீட்டிலிருந்து புறப்பட்டு பதினெட்டு நாட்கள் ஆகியிருந்தன அவருக்கு. புதுடில்லிக்குப் போய் அங்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பும் வழியில் நாக்பூர் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து பிறகு சென்னை வந்திருக்கிறார். சென்னையில் இருந்து என்னோடு கைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஆம்பூர் வருவதாக சொன்னவுடன் மகிழ்ச்சியாக இருந்த்து. அவர் வருவதாக சொன்ன அந்த நாளில் தான் ராணிப்பேட்டையில் பிரளயனுடைய  பாரியின் படுகளம் நாடகம் நட்த்தப்படுவதாக அந்த நிகழ்ச்சியை நடத்தும் பெல் தொழிற்சாலையில் பணியாற்றும் கலைஞர் முகில் அவர்களால் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.அந்த நாடகத்தை பார்த்துவிட வேண்டும் என்னும் ஆர்வம் அழைப்புவந்த நாளிலிருந்த இருந்தது. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் அந்த நாடகத்தைப் பார்க்கத்தான் டில்லியிலிருந்தே முத்துக்கிருஷ்ணன் சென்னை வந்த்தையும் அந்நாடகத்தினைப் பார்த்த்தும். நாடகம் சிறப்பாக வந்திருப்பதாக முத்துக்கிருஷ்ணன் சொன்னதும் இன்னும் ஆர்வம் கூடியது. ராணிப்பேட்டையில்தான் என் தங்கை இருக்கிறார். அப்படியே அவர்களையும் பார்த்ததுபோல இருக்கும் என்றும் திட்டம் இருந்தது. கவிஞர் சுகிர்தராணியும் அங்கேயே இருப்பதால் அவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும் என்று திட்டம் விரிவடைந்துக் கொண்டே இருந்த்து. அன்று தான் முத்து வருவாதகவும், காலை பிருந்தாவன் விரைவு வண்டியில் 9.00 மணிக்கு ஆம்பூர் வந்துவிட்டால் அவரை ரயிலடியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்துவிட்டு பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வினை பார்வையிட்டுவிட்டு மீண்டும் நண்பகலில் வந்துவிடுவதாக திட்டம் போட்டோம்.

அன்று இரவே தோழர் விஜய ராஜனுக்கும் சொல்லியாகிவிட்ட்து. அவருக்கு வேலை ஒரு மனிக்கு என்பதால் காலையில் முத்துவுடன் இருக்கவேண்டும் என்றும் சொன்னேன். வழக்கறிஞரும் எழுத்தாளருமான முஷ்தாக் அவர்களின் கடைக்கு அழைத்துச் சென்று உரையாடிக் கொண்டிருக்கலாம் என்றும் பேசிவைத்திருந்தோம்.

சொன்னபடியே எல்லாம் நடந்தது.முத்துகிருஷ்ணன் வந்திருந்தார். ஆனால் என்னால் அவரோடு இருக்க முடியவில்லை. தேர்வு வேலை இருந்தது. ஒரு மணிக்கு தேர்வு முடிந்தவுடன் அவருடன் இருந்தோம். நல்ல பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டோம். பிறகு ஆம்பூரை பேசிக்கொண்டே சுற்றிக்  கொண்டிருந்தோம். அவருக்குத் தேவையான காலணிகளை வாங்கிக்கொண்டார். மீண்டும் மாலை 5.00 மணிக்கு அவரை பிருந்தாவனத்தில் ஏற்றிவிட்டேன். முத்துகிருஷ்ணன் குறைந்த காலத்தில் எனக்கு நண்பனான மாதிரிதான் எழுத்தாளன் ஆனதும். அவருடைய பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும் பயணமும் அவரை அந்த் நிலைக்கு உயர்த்திருந்தன. இத்தனைக்கும் தமிழே படிக்கவில்லை என்கிறார். அவரின் எழுத்துகள் அவரின் இந்தக் கூற்றை பொய்யாக்குகின்றன. ஒளிராத இந்தியா மலத்தில் தோய்ந்த மானுடம் மற்றும் அவருடைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் பெருமதவாதத்திற்கு எதிரான கருத்துக் கலகங்கள். அவருடனான சந்திப்பு எழுதத்தூண்டும் ஒன்று.

                                                                     

கூத்தும் கூத்து சார்ந்த கொடுமையும்

ஒரு வழியாக முடிந்தது போலிருக்கின்றது தொகுதி உடன்பாடுகள். திமுக அணியும் அதிமுக அணியும் முடிவுற்ற சூழல் நிலவுகிறது. வழக்கம் போல தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும்

சண்டைவிடும் வேலையை இரு கழகங்களும் செய்து முடித்திருக்கின்றன. அணி மாறி போட்டியிட மாட்டோம் என்று முழுமையாக ராமதாஸை நம்பிய திருமா தொகுதி மாறிக்கூட

போட்டியிடாத ராமதாஸின் தமிழ் தேசிய உணர்வினை இன்னும் நம்புவார் என்று நினைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினையினை தேர்தல் பிரச்சினையாக வைக்க

இனி ஜெயலலிதாவை தவிர யாரும் இல்லை என்னும் நிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கின்றனர். யாரிடம் தமிழர்கள் தங்கள் தேசிய உணர்வினை வெளிப்படுத்த வேண்டுமோ

அவர்கள் சொல்லுவதற்கு இனிமேல் கட்டுபட்டு நடப்பதாக உறுதிக்கூறிய பிறகுதான் அண்ணன் தங்கை பாசமே மலர்ந்திருக்கின்றது. கருணாநிதியிடம் இப்படி ஒரு உறுதியை

ராமதாஸ் தரவில்லையோ. சரி அடுத்த சட்டமன்ற தேர்தலில் மறக்காமல் கருணாநிதி ராமதாஸிடம் இவ்வுறுதிமொழியை வாங்கிவிடுவாராக.

அதிமுக கூட்டணியில் முதன்மைக் கூட்டாளியாக இருந்த மதிமுக இப்போது என்னவாக இருக்கின்றது? தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை திமுக தரவில்லை

என்பதற்காக கடந்த தேர்தலில் திமுக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வெட்டுருக்களைக்கூட மறந்துவிட்டு இரவோடிரவாக அதிமுக அன்புச்சகோதரியின் கூடாரத்திற்குப் போன

வைகோ இப்போது தன்மான உணர்ச்சியினை எங்கு வைப்பார்? இப்போதுதான் உள்ளே வந்த பாமக விற்கு ஏழு தொகுதிகள் ஒரு மக்களவை என்றும் எந்தெந்த தொகுதிகள்

என்றும் முடிவாக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் அண்ணனுக்கு தயாராக தட்டில் சீட்டுகளை வைத்திருக்கும் சகோதரிக்கு கூடவே இருந்த சின்ன அண்ணன் இன்னும்

போயஸ் தோட்ட சமையலறையின் வாசலில் நிற்பது தெரியாமலே இருக்கின்றது.சட்டமன்றத்தில் எதற்காக வருகிறோம் என்று தெரியாமலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளியே

வந்த உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களைப்போலவே வெளியே வந்த மதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையே முற்றுப்பெறவில்லை. கேட்பது எத்தனை கிடைப்பது எத்தனை என்பதனை

உணர்ச்சிப் பெருக்கோடு வைகோ சொல்வார் என எதிர்பார்க்கலாம்.

பொதுவுடைமை தோழர்கள் காங்கிரஸ் சீனாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. நந்திகிராமில்

விவசாயிகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்தான் நமக்கு ஞாபகம் வந்து தொலையுதே. அவர்களும் சீட்டுக்காகத்தான் இந்த ஆட்டத்தையும் ஆடுகிறார்கள்.அதுமட்டுமல்ல

எனக்கு திடீரென்று இப்போது இன்னொரு பிரச்சினை நினைவுக்கு வருகிறது. மதுரை உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காய் பாடாய் பட்டவர்கள்

அப்போது அதைகுறித்து எந்த ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா இப்போது எப்படி தோழர்களின் பிள்ளை சமூக எதிர்ப்பை அல்லது தலித் அல்லாத மக்களின்

எதிர்ப்பை தாங்கிக்கொள்வார்? தோழர்கள் இதைகுறித்து எதுவும் பேச மாட்டார்கள் என்று கருதுகிறேன். இருக்கட்டும்.

திமுக கூட்டணி திமுக 21 காங்கிரஸ் 16 விடுதலைச் சிறுத்தைகள் 2 முஸ்லிம் லீக் 1. பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் வெறும் மூன்று. முக்கிய மந்திரியாக

மத்திய அரசில் அங்கம் வகித்த லாலு ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரஸின் பலத்தை தீர்மானித்து தந்தவை. 80 இடங்கள் உள்ள உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ்

கட்சி ஆட்சியிலிருந்து இறங்காவண்ணம் காத்த கண்ண பரமாத்மா முலாயம் சிங் தர முன்வந்ததோ வெறும் 15 இடம். வடமாநிலங்களிலேயே இவ்வளவு பலவீனப்பட்ட

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 40க்கு 16 ஏன்? அவ்வளவு பலம் உள்ளதா காங்கிரஸ் கட்சி. எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனைப்பேருக்கு ஒரு கோஷ்டி இருக்கின்றது

தொகுதிக்குப் பிறகு வேட்பாளர் தேர்வுக்குப்பின் பாருங்கள் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் காரர்களே தொகுதிக்குகுள் விடமாட்டார்கள். அத்தகைய ஒற்றுமை வலிமை

கொண்டது. கட்சிக்குள்ளே ஒற்றுமையில்லாத காங்கிரஸ் நாட்டு ஒற்றுமைப் பற்றி என்ன செய்யமுடியும்? அதுவும் தமிழ்நாட்டில் தனித்து காங்கிரஸ் நிற்குமே என்றால்

கட்டுத்தொகையினை இழக்கும் கட்டாயம் அதற்கு வரும். அப்படியிருக்க ஏன் இத்தனை இடங்களை திமுக ஒதுக்கவேண்டும். தன்னுடைய ஆட்சியைக் காக்க பலமில்லாத

காங்கிரஸுக்கு இப்படி வாரி தருவது எப்படி நியாயம். தன்னுடைய பலத்தை விட காங்கிரஸ் அதிக பதவி சுகத்தை அனுபவிப்பது தமிழகத்தில்தான். அதுவும் தமிழர்களின்

உணர்வுகளுக்கு எதிராக இருந்துக்கொண்டே.

தொண்டர் பலமுள்ள கட்சி என்று பார்த்தால் திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தான். ஆனால் அதற்கு இரண்டே இடங்களைத்தாம்

ஒதுக்கியிருக்கிறார்கள். இதுகூட திருமாவளவனின் அளவு கடந்த பொறுமையினால் கிடைத்தது. அவரின் வழக்கமான உணர்ச்சிவசப்படும் தன்மையினை இந்த முறை

கொஞ்சம் ஒதுக்கிவைத்ததால் வந்தது. திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை பொதுத்தலைமைக்கும் அதுமட்டுமல்ல தமிழ்தேசிய அரசியலை முன் இழுக்கும் தலைமையும்

அவருக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்த கூட்டணி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்தேசிய அரசியல் தொடங்கிய அவரின் போக்கு தலித்

தோழமைகளை இழந்து நிற்கிறது.கூடவே இருப்பார் என்று கருதப்பட்ட ராமதாஸ் இப்படி மீண்டும் தன் சுய சாதிக்குள்ளேயே அமுங்கிவிடுவார் என்பதை திருமாவளவன்

அறியவில்லை.

இத்தனை கூத்துகளும் அரங்கேறும் இடமாக தமிழக அரசியல் இருக்கின்றது. இதில் தமிழ் சார்ந்த அடையாளமோ தமிழ் அரசியலோ இல்லை என்பது தான் உண்மை. வேறு

எந்த தேசிய இனத்திற்கும் இல்லாத கொடுமை இது. தன் தேசிய தன்மை இல்லாமலே தங்களை ஆளுபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அந்த இனம் பங்கேற்பது.

 

 

சிலம்பு

ஏதோ நடிகர் சிலம்பரசனைப் பற்றி என்று கருத வேண்டாம். அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் குறித்து பேசவேண்டி இருக்கிறது. ஏனென்றால் அது எழுதப்பட்ட காலத்தில் அப்படி ஒரு காப்பியம் உலகில் வேறு எந்த மொழியிலேயும் எழுதப்படவில்லை. இலியட் போன்ற காப்பியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவை மன்னர்களைப் பற்றியும் போரை முன்வைத்தும் இருக்கும். ஆனால் சாதாரண ஒரு குடும்பத்தலைவனையும் தலைவியையும் கதைத்தலைமையாக வைத்து எழுதப்பட்ட காப்பியம். தமிழ் மக்களின் பண்டைய பண்பாடு கலைகளில் அவர்களின் ஈடுபாடு ஆகியவற்றை நம்மால் நன்கு உணரமுடியும்.

நான் அதைபற்றி இங்கே கதைக்க வரவில்லை. சிலம்பு எழுதப்படுவதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன

1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

3. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்

பின் கூறப்பட்டுள்ள இரண்டும் தனிமனித வாழ்வு சம்மந்தப்பட்டவை.  ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.அவரின் பண்பு நலன்,உடல்நலன் சார்ந்தது அது.அல்லது தேவையை சார்ந்தது.

ஆனால் முதலில் கூறப்பட்ட கருத்து சமூகம் சார்ந்தது. சமூகத்தின் இயல்பு என்பது பிழை செய்யக் கூடாததாக பிழை செய்யக்கூடியவர்கள் சமூகத்தலைமை ஏற்கக்கூடாதவர்களாக இருக்கவேண்டும். அரசியல் என்பதை நவீன யுகத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். அதையும் தாண்டி அது சமூகத்தை ஆள்பதாக வழிநடத்தக் கூடியதாக முன்னிகழ்வுகளை நிகழ்த்த தக்கதாக இருக்கும் காரணத்தால் அரசியல் பிழை நேராமல் இருத்தல் என்பது சமூகக்  கடமையாக கருத்தப்பட்ட பண்பாட்டு பயன்பாடு மிக்கதாக ஒரு சமூகம் இருக்க வேண்டும் என்பதன் உயர்ந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எத்தனிப்பு தமிழ் சமுகத்திற்கு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இப்போது பாருங்கள் அரசியல் என்பதே பிழை செய்யும் இடமாக அல்லவா இருக்கின்றது. அதுமட்டுமல்ல செய்யப்படுகின்ற பிழைகள் அத்தனையும் அரசியலையே மையமாக வைத்தல்லவா செயல்படுகின்றது. எல்லாம் ஓட்டுக்காக தேர்தலுக்காக என்றே சொல்லபடுகின்றது. தேர்தல் என்பது தவறில்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்னும் போது இந்த ஜனநாயகம் எதை நமக்கு தருகிறது என்பதை நாம் உற்று நோக்கவேண்டும்