திசநாயகா

தீர்மானமானதாக இருக்கின்றது எல்லாம்
உண்மையின் மெய்பிம்பங்களை மறைக்கும்
மாயபிம்பங்களின் தோற்றங்கள் உட்பட
யாருக்கும் தெரியாமல் கொல்லும் தந்திரமும்
எல்லாவற்றையும் சூறையாடும் குற்றங்களும்
வெளிச்சத்திற்கு வருதல் சாத்தியமாகும்
உண்மையின் சொரூபத்தைத்
தோலுரித்து
ஒரு பழத்தைப் போல தருதல்
அதிகாரத்தின் தொண்டையில் முள் ஏற்றுதல்
கத்தும் அதன் வலிமையில்
ஒரு வதை என்பதோ
ஒரு வலி என்பதோ
ஒரு கைது என்பதோ
ஓர் உயிர் என்பதோ
நீதியின் அழிவு என்பதோ
எதுவுமற்று
முன்பே தீர்த்த தீர்ப்பின் கொழுந்துகளில்
எரியும் இருபது ஆண்டுகளின்
திசைகளில்
புதைக்கப்படுகின்றன உண்மையின் வாய்கள்
அவை
தமிழென்றாலும்
சிங்களமென்றாலும்

டேவிட்.டி.பக்: படைப்பின் மீதான காதலன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் என்பது குறள். குறள் குறித்த பெருமிதம் என்பது வேறு தமிழர்கள் அதைப் படிப்பது அல்லது பின்பற்றுவது என்பது வேறு. ஆனால் இங்கே கூறப்பட்ட குறளின் வரி மிகவும் சிறப்பானது. அன்பை யாராலும் அடைக்கமுடியாது அதற்கான தாழ்ப்பாள்களை இதுவரை யாரும் உருவாக்கவில்லை. அப்படிப்பட்ட அன்பின் இருப்பிடமாகத்தான் வந்தார் திரு. டேவிட்.டி.பக் அவர்கள். டேவிட் அமெரிக்காவின் கெண்டிகா பகுதியைச் சார்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியாவில் ஒருகாலத்தில் தமிழகத்தில் வசித்து வந்ததால் தமிழோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பின் அவர்கள் அமெரிக்காவுக்கே திரும்ப சென்றுவிட்டார்கள். ஆனால் தமிழை மறக்க முடியாத தீராத அன்புகொண்ட டேவிட் எழுபதுகளில் மீண்டும் தமிழகம் வந்திருக்கின்றார். மதுரையில் ஈராண்டுகள் தங்கி அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லித்தந்துள்ளார். ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த அதே வேளையில் தமிழையும் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டுள்ளார்.

தமிழின் மேல் மிக்க பற்றுடையவராகத் தன்னை மாற்றிக்கொண்ட டேவிட் தமிழ் இலக்கியங்களைத் தொடர்ந்து வாசிக்கும் பழக்கத்தைத் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றார்.தமிழின் முக்கிய இலக்கியங்கள் பலவற்றை தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்துள்ளார் டேவிட். அதில் மிகவும் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி.

ஒருமுறை டொராண்டாவில் நடைபெற்ற தமிழ் மாநாட்டில் பாண்டிச்சேரி பிரஞ்ச் நிறுவனத்தின் கண்ணன் அவர்களைச் சந்தித்த டேவிட் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் ஒன்றைத் தர அவர்களுக்குள் நெருக்கம் அதிகமாகி இருக்கலாம். தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் நூல் தமிழில் மிகமுக்கியமான நூல் என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு படைப்பாளி தன் அனுபவங்களைப் பற்றி கூறி அவரின் படைப்புகளில் சிலவற்றை சேர்த்து தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதில் இருந்த எல்லா படைப்பாளிகளையும் சந்திப்பதற்காக அவர் சென்னை வந்திருந்தார். தலித்முரசு ஆசிரியர் திரு.புனித பாண்டியன், முற்றுகை ஆசிரியர் திரு.யாக்கன் ஆகியோரைச் சென்னையில் சந்தித்துப் பேசிவிட்டு பிறகு என்னைப் பார்க்க ஆம்பூருக்கு வந்திருந்தார்.

06.09.09 ஞாயிறு அன்று காலை பிருந்தாவன் விரைவு தொடர்வண்டியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். நம்முடைய சூழ்நிலையை அப்படியே தனதாக்கிக் கொள்ளக்கூடியவராக இருந்தார். அறுபதைக் கடந்தவர்.ஆனால் மிகவும் சுறுசுறுப்பானவர். என்னுடைய இருசக்கர வாகனத்தில் ஆம்பூரைச் சுற்றிக்காட்டினேன். பிறகு கஸ்பாவிற்கு வந்தோம். கொஞ்ச நேரம் தூங்கினார். பிறகு என்னுடைய பெற்றோர்களுடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். பதில் சொன்னேன். எங்கள் தெருவில் அப்போது சிறுவர்களும் பெரியவர்களும் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் அவரும் கலந்துகொண்டார்.தெருவில் அமைர்ந்து அவர் பிள்ளைகளோடு தாயம் விளையாடியது எங்கள் தெரு மக்களுக்கு ஒரே வியப்பு. கூடுதலாக என்னவென்றால் அவர் பேசிய தமிழ்.அது அவர்களுக்கு மிகவும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது.

பிறகு மீண்டும் ஆம்பூரை சுற்றினோம். எங்கள் தலித் பகுதியின் நாட்டாண்மை திரு.வெங்கடேசனை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தேன்.

‘இவர் எங்கள் சேரியின் தலைவர்’

’ஓ.. அப்படியா! வணக்கம்’ என்று கைகொடுத்தார் டேவிட்.

’ஐ யாம் ப்ரெசிடெண்ட்’ என்று சத்தமாக ஆங்கிலத்தில் கூறினார் எங்களூர் தலைவர்.

உடனே டேவிட் ’நாட்டாமை’ என்று சொன்னார். ஒரு நிமிடம் உறைந்த்ப் போனார் எங்களாவர்.

அடுத்து ஒரு பிரியாணி கடைக்குப் போய் மாட்டிறைச்சி பிரியாணி ருசி பார்க்கலாம் என்றேன். ஒரு பிளேட் வாங்கி கொஞ்சம் சாப்பிட்டார். அதன் ருசி மிகவும் அருமையாக இருந்தது என்று அவர் சொன்னார். முழுமையாக சாப்பிட்டு இருக்கலாம் ஆனால் அழகியபெரியவனின் வீட்டில் மதிய உணவு சாப்பிடுவது என்று திட்டம். அதனால் நல்ல பிரியாணியையும் விட்டுவிட்டு வந்துவிட்டோம்.

பிறகு நேராக அழகிய பெரியவனின் வீட்டிற்குச் சென்று அங்கு அவருடன் உரையாடிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு பின் சாப்பிட்டோம். அழகிய பெரியவனின் துணைவியார் மிகச்சிறப்போடு அன்புகலந்து சமைத்திருந்தார். மிக அருமையான சாப்பாடு. அங்கிருந்து பாலூர் என்னும் தலித் கிராமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்தை மையமாக வைத்து அழகிய பெரியவன் கதை ஒன்று எழுதியிருந்தார். அந்த கிராமத்தைப் பார்த்துவிட்டு அங்கு கூடியிருந்த இளைஞர்களுடன் உரையாடிவிட்டு திரும்பினோம். வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தோம். ஆம்பூரில் அய்ந்து மணிக்கு பிருந்தாவன் பிடித்தால் சீக்கிரம் வந்துவிடலாம் என்று நினைத்து வேகமாக வந்து டிக்கெட் வாங்கினோம். ஒரு மணிநேரம் மிகவும் தாமதமாக வந்தது அந்தத் தொடர்வண்டி. ஆம்பூர் ரயில் நிலையத்தில் அமர்ந்துக் கொண்டு பேசினோம். அவர் தலித் இலக்கியம் எனது அனுபவம் என்னும் புத்தகத்தை மொழிபெயர்க்கப் போவதையும்  அதற்காக அவர் பெங்குவின் நிறுவனத்தை அணுக இருப்பதையும் கூறினார். ஆம்பூர் மிகவும் பிடித்துப் போய்விட்டதாகவும் கூறினார். வானத்தில் மேகம் சூழ்ந்தது. மழை தூறியது. டேவிட் தன் பையில் குடை வைத்திருந்தார். மழைக்குப் பிடித்துகொண்டார். எனக்கு மழையில் நனைவது பிடிக்கும் என்றேன். தனக்குப் பிடிக்காது என்றார். தொடர்வண்டி வந்தது. அன்போடு விடை கொடுத்தேன்.

நீக்கப் படாத அவை குறிப்புகளும் ஆதவனின் குறைந்த ஒளியும்

யாழன் ஆதி

துரையில் நடந்த கடவு கூட்டத்தில் தமிழ்நதிக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்கும் நடந்த உரையாடலை வாசித்து முடித்தபின் மிகவும் அயர்ச்சி அடைந்தேன். ஆதவனின் பேச்சும் அவரின் பதில் கடிதமும் அவரின் மதிப்பை (இதற்கு கூட ஆதவனால் பகடியாக ஏதாவது கூறமுடியும். எ.கா. உம் மதிப்பு ஒண்ணும் மசுர வளர்க்காது) வெகுவாக குறைக்கிறது என்றே சொல்லவேண்டும். உத்தபுர சுவர் விஷயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி எடுத்த செயல்பாடுகளை எழுத்தில் வடித்து தமிழகத்தில் சாதி ஒழிக்க வந்த ஒரே இயக்கம் அதுதான் என்பதற்காக தலித் முரசு போன்ற இதழ்களையெல்லாம் கூட அவர் விடவில்லை என்பது மிக முக்கியம். தன் கட்சிக்கு இவ்வளவு விசேஷமாய் அவர் உண்மையாக இருந்தார். ஆனால் அவரின் கட்சி உத்தபுர சுவரை சுட்டுத்தள்ளுவேன் என்று சூளுரைத்த?! ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து மதுரை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் இருகைகளையும் கட்டிக்கொண்டு மேடையில் சிலையாட்டம் நிற்க வைக்கப்பட்ட மோகன் குறித்தெல்லாம் அவரால் பகடி செய்யமுடியவில்லை. அந்த அம்மா வேறு எப்படியாவது ஈழத்தை வாங்கித்தந்து விடுவேன் ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கும்போதும் பேசாமல் பேன் பார்க்கும் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.

அவரைப்போல அதிரடியாக நையாண்டி பேச நமக்கு வராது. ஆனால் எத்தனையோ ஆண்டுகளாக விடுதலைக்காகப் போராடும் மக்களை இவ்வளவு இழிவுப் படுத்தவேண்டும் என்னும் எண்ணம் எப்படி அவருக்கு வந்தது என்று தெரியவில்லை. வால்பாறைக் கூட்டத்தில் யவனிகாவின் தொகுப்பைப் பற்றி பேசிய மதிவண்ணன் சர்வதேச ஒடுக்குமுறை குறித்தெல்லாம் எழுதுபவர்கள்  தங்களை சுற்றியிருக்கும் சாதி பிரச்சனைப் பற்றி எழுத வேண்டாமா என்று கேட்ட கேள்விக்கும் படுகொலைச் செய்யப்படும் தமிழரைக் காக்க பெரும் எழுத்தாளர்களாகிய நீங்கள் எல்லாம் எழுதக் கூடாதா என்று தமிழ்நதி கேட்டதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதான் நான் சொல்லுவேன். மதிவண்ணனின் கேள்விக்கு எதிர்கேள்வியாக நீங்கள் கங்காணிகளைப் பற்றி எழுதியிருக்கின்றீர்களா என்று மற்றவர்கள் கேட்டதையொத்துதான் பதில் அளித்து இருக்கின்றார் ஆதவன். தேசியத்திற்குள் ஒன்றுபட்டு இருக்கும் அவரின் மார்க்கிசியமே அவரை இப்படி பேசவைத்திருக்கின்றது என்ற உறுதியான நம்பிக்கையினை நாம் பரப்பலாம்.

தமிழ்நாட்டிலிருந்துப் போன தமிழர்களை அங்கிருந்த பூர்வீகத்தமிழர்கள் எப்படி நடத்தினார்கள்? திண்ணியத்திலே பீ தின்ன வைக்கப்பட்ட போது எங்கே போனீர்கள்? அதற்கு இப்போது பதிலைச் சொல்லுங்கள் இல்லையென்றால் ஒன்றுபட்ட இலங்கையில் வாழுங்கள் முடிந்தால் ராஜபக்சேவுடன் கூட்டணி வைத்து உங்களுக்கு இலங்கையில் மார்க்சிஸ்டு கட்சி ஆட்சிக்கு வந்தால் கடலை மிட்டாய் வாங்கித்தருகிறோம் என்பார். தன்னுடைய தலித் அரசியலையே தன் எழுத்தில் போல கட்சியில் பேச முடியாமல் தவிக்கும் ஆதவனுக்கு அடுத்த தேர்தலில் ஓசூரில் நிற்க அதிமுக கூட்டணியில் வாய்ப்பு கிடைக்கலாம் அல்லவா?

சில விளக்கங்களைப் பெற விழைவதில் தவறேதும் இருக்காது என்றே நினைக்கின்றேன். இந்திய விடுதலைப் போர் நடைபெற்றபோது சாதி அற்றுப் போயா இது இருந்தது. அப்போது பொதுவுடைவாதிகள் இங்கு இல்லையா? அவர்கள் அப்போது தலித்துகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்துப் போராடிக் கொண்டிருந்த புரட்சியாளர் அம்பேத்கருக்கு எவ்விதத்தில் உறுதுணையாக இருந்தார்கள். தலித்துகளைக் கொடுமைப்படுத்திய பார்ப்பன பனியாக்கள் கைகளிலும் இந்துத்துவ வாதிகளிடத்திலும் இந்திய சுதந்திரம் தரப்பட்டபோது இவர்களுடன் இருக்க முடியாது தலித்துகளுக்கு தனிநாடு கொடுங்கள் என்று கேட்ட அம்பேத்கருக்கு ஆதரவாக அன்றைய பொதுவுடைமைவாதிகள் இருந்தார்களா? இன்னும் தீர்க்கப்படாத கொடுங்கனவாக இருக்கின்ற சாதிப் பிரச்சனைகளை ஒழிக்க இப்போது மிகவும் வளர்ந்துள்ள ஆதவனின் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கின்றது என்பதை அவர் கூறாமல் ஈழப்போரில் தங்கள் வாழ்வைக் கொடுத்துப் போராடும் போராளிகளை குறை கூறாமல் இருக்கவேண்டும்.

இன்றைக்குப் புலிகள் அழிக்கப்பட்டார்கள். வதைமுகாம்களாக மாறிப் போயிருக்கும் இலங்கை அரச முகாம்களில் தத்தளிக்கும் தமிழினத்தின் மக்களை எப்படி மீட்பது என்று சிந்திப்பது யார்? அவர்களுக்கான அரசியல் சார்ந்த உரிமைகளைப் பேசுவது யார்? ராஜபக்சேவும் அவருடைய அரசும் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துக் கொண்டுதான் இருக்கின்றது. தலித் பார்வையில் ஈழப்பிரச்சினையை அணுகவேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. அதே பார்வையில் ஆதவன் குடியிருக்கும் கோயிலான அவருடைய கட்சியைப் பார்க்கவேண்டும் என்றுதான் நாம் கேட்கிறோம். அதுதான் அவருடைய வார்த்தைகளுக்கான நியாய்த்தைப் பெற்றுத்தரும்.

ஈழப்பிரச்சினையையும் இங்குள்ள சாதித்தமிழரின் போக்கையும் நாம் முடிச்சிப் போடமுடியுமா என்ன? இங்குள்ளவர்கள் ஈழப்பிரச்சினைய அரசியலின் பகடைக்காயாக மட்டுமே பார்க்கிறார்கள் என்பது ஆதவன் போன்ற அறிவுசாலிகளுக்கு தெரியாதா என்ன?

ஈழத்தில் சாதி இல்லை என்று யாரும் சொல்லவில்லை. தலித் படைப்புகளைத் தந்த டேனியேலின் படைப்புகள் நமக்கு சொல்கின்றன எல்லாவற்றையும். ஆனால் அறுபது ஆண்டுகால பிரச்சனையினை அல்லது விடுதலைப் போரை எப்படி நம்மால் புறந்தள்ள முடியும். இந்திய விடுதலைக்கு தலித்துகள் பங்காற்றவில்லை என்று இப்போது இங்கே சிலபேர் கூப்பாடு போடுகிறார்களே அதுபோல் ஆகிவிடாதா? சரி புலிகள் அற்ற தமிழர்கள் இப்போது சிங்கள உழைக்கும் மக்களோடு இயைந்து வாழ்ந்திட இயலுமோ? அதற்கு ஆவணவற்றை ஆதவன் செய்வாரா? எங்கள் ஊர்ப்பக்கம் இருக்கும் எம்.எல்.ஏ ஞானசேகரனை தோற்கடித்து விடுவார் போலிருக்கின்றது ஆதவன்.

ஆதவன் மேலும் அவருடைய எழுத்துக்கள் மீதும் மாறாத பற்றும் நம்பிக்கையும் நாம் வைத்திருக்கின்றோம். அது தகர்ந்து போகும் அளவுக்கு சில நேரங்களில் அவருடைய செயல்கள் அமைந்துவிடுகின்றன. ஈழத்தமிழர் இப்படி கொல்லப்படுகின்றனரே என்று கேட்டால் அவர்களிடம் இருக்கும் சாதியைப் பற்றி ஏன் நீங்கள் கவலைப்படவில்லை என்கிறார். இது அவரின் பார்வை. அப்படி அவர் பேசியிருந்தால் நாம் எந்த விதமான கருத்தினையும் சொல்லல்  ஆகாது. ஆனால் அவர் தலித் பார்வை என்று அதை கட்டமைக்கின்றபோது ஒட்டுமொத்த தலித்துகளின் நிலையா அது என்பது கேள்வியாக இருக்கின்றது. இத்தகைய கொடும் படுகொலையினைச் செய்த ராஜபக்சேவை அவர் ஒரு வார்த்தைகூட அவர் விமரிசிக்கவில்லை. அதற்குத் துணைபோன இந்தியாவின் சதியினை அவர் பேசவில்லை. பொதுமக்கள் கொல்லப்படுவது குறித்து தன் ஆக்கங்களை வேண்டாம் ஒரு பேச்சாகக்கூட அவர் பிரசுரிக்கவில்லை. ஆனால் புலிகளைத் திட்டுவதும் அவர்களின் அரசியலை விமரிசிப்பதும் தன்னுடைய முழுமுதல் கடமையாகக் கொண்டிருக்கின்றார். ஈழத்தில் இருக்கும் சாதிய படிநிலையை வைத்துக் கொண்டுப் பார்த்தாலுமே யார் இப்போது ஈழத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றார்கள்? இலங்கை அரசு நடத்தும் முகாம்களில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருப்பவர்கள் யார்? யாரெல்லாம் தன்னுடைய மண்ணைவிட்டு வரமுடியாத சூழலில் இருக்கின்றார்களோ அல்லது அகதிகளாக உலகநாடுகளில் அலையாமல் தன் மண்ணிலேயே இருந்து கடைசிவரை பார்த்துவிடுவது என்று நினைக்கும் விளிம்பு நிலை மக்கள்தானே? அவர்களை கொத்தணி குண்டுகளையும் வேதி குண்டுகளையும் போட்டு கொன்ற கொடுமையைப் பேசமுடியவில்லை என்றால் தலித் விடுதலையினை மட்டும் எதை வைத்துப் பேசுவது என்பது நமக்கு சரியாக விளங்கவில்லை.

சாதியையும் அதன் வேரான இந்து மத்த்தையும் எதிர்க்காமல் புரட்சிபேசும் அவருடைய கட்சி சாதி மலிந்துப் போய் கிடக்கும் இந்தியாவில்தான் நடக்கின்றது. பாட்டாளி வர்க்கபுரட்சியையும் உழைக்கும் மக்களின் ஆட்சியையும் கொண்டுவருவது ஆகாது. கட்சியின் முக்கிய வேலை திட்டமாகவே சாதி ஒழிப்பை நிகழ்த்திவிட்டு அப்புறம் வர்க்க புரட்சியை வைத்துக் கொள்ளலாம் என ஆதவன் அங்கு பேசமுடியுமோ என்றால் கண்டிப்பாக முடியாது. ஏனென்றால் சாதி ஒழிப்பு என்னும் ஒன்றும் வேலைதிட்டங்களில் ஒன்று.

ஈழத்திலும் அதைவைத்து தானே பார்க்க வேண்டும். விடுதலைப் புலிகளின் இயக்கத்தில்கூட எத்தனையோ தலித்துகள் உயர் பதவிகளில் இருந்திருக்கின்றனர். அதை வழிநடத்தி இருக்கின்றனர். புலிகளின் அரசியல் தவறு என்றால் உலகத்திலிருக்கும் இத்தனை கோடி தமிழர்கள் அதை எப்படி ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சித்தாந்தங்களில் அதை நடைமுறை படுத்துவதில் சிக்கல்கள் அல்லது தவறுகள் இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக ஒரு விடுதலை இயக்கத்தையோ அல்லது அது போராடும் தேசிய விடுதலையினையோ சாதியின் பேரால் கொச்சைப் படுத்துதல் ஆகாது. அது தலித் பார்வை இல்லை. ஒடுக்கப்படுகின்ற மக்கள் யாராக இருந்தாலும் அவர்களின் விடுதலைக்காக பேசுவதே தலித்தியம். அது விடுதலைக்கான கருத்தியல்.

புரட்சியாளர் அம்பேதகர் கருதுவதைப் போல தலித் விடுதலை என்பது பிற்படுத்தப்பட்டவரின் ஒத்துழைப்பையும் சார்ந்த ஒன்றுதான். தலித் பிற்படுத்தப் பட்டவரின் ஒற்றுமையை அவர் விரும்பியதைப் போல ஈழத்தமிழர்களின் விடுதலையும் சாதி கடந்துதான் வரும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. சாதியம் அது சார்ந்த பிரச்சினைகளயும்விட வாழ்தல் என்பதுவும் அதைவிட விடுதலை என்பதும் மிக முக்கியம்.

இன்றைய சூழலில் தமிழர்களின் நிலை என்ன? அங்கே நிலவும் சாதி இப்போது அதாவது புலிகள் அல்லாத தமிழீழத்தில் எப்படி சாத்தியமாகும். கோட்பாட்டளவிலே இங்கேயே இருந்துக்கொண்டு நாம் வாய்பேசுவதைவிட அல்லது நாட்டை விட்டு வெளியேறி சுகமாக அயல்நாடுகளில் வாழ்வோரைவிட ஈழத்திலே கிடந்து அழிந்துக் கொண்டிருக்கும் அவர்கள் தான் பேசவேண்டும். பின் இவர்கள் பேசி என்ன ஆகப்போகிறது?

வலித்தல்

அயர்ந்து தொங்கும் கிளையின் மீதொரு கூடு. வானை தன்னுள் வைத்து பாதுகாக்கிறது. கிளையின் நெய்தலில் கையாளப்பட்ட நுட்பம் கலைக்க காற்று மிகைகிறது. அடிமானத்தின் பள்ளத்தில் நீர் சேரசேர அது தனக்கானதை உறிஞ்சி கொடுக்கின்றது. மேகங்கள் வளரும் இடம் இப்போது கூடு. கூட்டைப் பற்றி கவலைப்படும் நீங்கள் கண்டிப்பாக அடுத்த கோடையில் வரும் மழையை தரிசிக்கலாம்

யாழன் ஆதி கவிதைகள்

1

மௌனத்தின் கூர்மையை

அறியாத உன் எத்தனிப்பு

படபடக்கும் ஒரு பட்டத்தைப் போன்றது

காற்றின் கைகள் கிழிக்கலாம் அதை.

2.

வெவ்வேறாய் காய்ந்த குளங்களில்

ஒன்றாய் குவிகிறது

சூரிய ஒளி.

3.

இரவின் குளிரை ஒப்படைத்துவிட்டு

செல்கிறேன்

என் கவிதைக்கான எழுத்துக்களை

நட்சத்திரங்களிலிருந்து பெறுகிறாய் நீ

இருப்பினும் சந்திப் பிழைகளைப் பற்றி

கவலைப்படுகிறார்கள் வாசகர்கள்

4.

எத்தனை வடிவங்களில் திசை மாறுகிறது

வாழ்க்கை

நீ கொண்டுவந்த தண்ணீரைப் போலவே.

5.

உனக்குத் தெரியாத எனக்கும்

எனக்குத் தெரிந்த உனக்கும்

என்ன இருக்கிறது

இடையில் இந்த இடைவெளியைத்தவிர.

6.

கிளாடிக்கு சொல்வதற்குமுன்

ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்

அதிக உயரமில்லாத இந்த மலைக்குன்றின்

பெயரையும்

என் அன்பினையும்.

அ.முத்துகிருஷ்ணன் வருகை

area

எழுத்தாளர் அ. முத்துகிருஷ்ணன் ஆம்பூர் வந்திருந்தார். வீட்டிலிருந்து புறப்பட்டு பதினெட்டு நாட்கள் ஆகியிருந்தன அவருக்கு. புதுடில்லிக்குப் போய் அங்கு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பும் வழியில் நாக்பூர் சென்று அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து பிறகு சென்னை வந்திருக்கிறார். சென்னையில் இருந்து என்னோடு கைப்பேசியில் தொடர்புக்கொண்டு ஆம்பூர் வருவதாக சொன்னவுடன் மகிழ்ச்சியாக இருந்த்து. அவர் வருவதாக சொன்ன அந்த நாளில் தான் ராணிப்பேட்டையில் பிரளயனுடைய  பாரியின் படுகளம் நாடகம் நட்த்தப்படுவதாக அந்த நிகழ்ச்சியை நடத்தும் பெல் தொழிற்சாலையில் பணியாற்றும் கலைஞர் முகில் அவர்களால் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.அந்த நாடகத்தை பார்த்துவிட வேண்டும் என்னும் ஆர்வம் அழைப்புவந்த நாளிலிருந்த இருந்தது. இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் அந்த நாடகத்தைப் பார்க்கத்தான் டில்லியிலிருந்தே முத்துக்கிருஷ்ணன் சென்னை வந்த்தையும் அந்நாடகத்தினைப் பார்த்த்தும். நாடகம் சிறப்பாக வந்திருப்பதாக முத்துக்கிருஷ்ணன் சொன்னதும் இன்னும் ஆர்வம் கூடியது. ராணிப்பேட்டையில்தான் என் தங்கை இருக்கிறார். அப்படியே அவர்களையும் பார்த்ததுபோல இருக்கும் என்றும் திட்டம் இருந்தது. கவிஞர் சுகிர்தராணியும் அங்கேயே இருப்பதால் அவர்களையும் பார்த்த மாதிரி இருக்கும் என்று திட்டம் விரிவடைந்துக் கொண்டே இருந்த்து. அன்று தான் முத்து வருவாதகவும், காலை பிருந்தாவன் விரைவு வண்டியில் 9.00 மணிக்கு ஆம்பூர் வந்துவிட்டால் அவரை ரயிலடியிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்துவிட்டு பத்தாம் வகுப்பு அரசுத்தேர்வினை பார்வையிட்டுவிட்டு மீண்டும் நண்பகலில் வந்துவிடுவதாக திட்டம் போட்டோம்.

அன்று இரவே தோழர் விஜய ராஜனுக்கும் சொல்லியாகிவிட்ட்து. அவருக்கு வேலை ஒரு மனிக்கு என்பதால் காலையில் முத்துவுடன் இருக்கவேண்டும் என்றும் சொன்னேன். வழக்கறிஞரும் எழுத்தாளருமான முஷ்தாக் அவர்களின் கடைக்கு அழைத்துச் சென்று உரையாடிக் கொண்டிருக்கலாம் என்றும் பேசிவைத்திருந்தோம்.

சொன்னபடியே எல்லாம் நடந்தது.முத்துகிருஷ்ணன் வந்திருந்தார். ஆனால் என்னால் அவரோடு இருக்க முடியவில்லை. தேர்வு வேலை இருந்தது. ஒரு மணிக்கு தேர்வு முடிந்தவுடன் அவருடன் இருந்தோம். நல்ல பிரியாணி கடையில் பிரியாணி சாப்பிட்டோம். பிறகு ஆம்பூரை பேசிக்கொண்டே சுற்றிக்  கொண்டிருந்தோம். அவருக்குத் தேவையான காலணிகளை வாங்கிக்கொண்டார். மீண்டும் மாலை 5.00 மணிக்கு அவரை பிருந்தாவனத்தில் ஏற்றிவிட்டேன். முத்துகிருஷ்ணன் குறைந்த காலத்தில் எனக்கு நண்பனான மாதிரிதான் எழுத்தாளன் ஆனதும். அவருடைய பரந்துபட்ட வாசிப்பு அனுபவமும் பயணமும் அவரை அந்த் நிலைக்கு உயர்த்திருந்தன. இத்தனைக்கும் தமிழே படிக்கவில்லை என்கிறார். அவரின் எழுத்துகள் அவரின் இந்தக் கூற்றை பொய்யாக்குகின்றன. ஒளிராத இந்தியா மலத்தில் தோய்ந்த மானுடம் மற்றும் அவருடைய மொழிபெயர்ப்புகள் அனைத்தும் பெருமதவாதத்திற்கு எதிரான கருத்துக் கலகங்கள். அவருடனான சந்திப்பு எழுதத்தூண்டும் ஒன்று.

                                                                     

கூத்தும் கூத்து சார்ந்த கொடுமையும்

ஒரு வழியாக முடிந்தது போலிருக்கின்றது தொகுதி உடன்பாடுகள். திமுக அணியும் அதிமுக அணியும் முடிவுற்ற சூழல் நிலவுகிறது. வழக்கம் போல தலித்துகளுக்கும் வன்னியர்களுக்கும்

சண்டைவிடும் வேலையை இரு கழகங்களும் செய்து முடித்திருக்கின்றன. அணி மாறி போட்டியிட மாட்டோம் என்று முழுமையாக ராமதாஸை நம்பிய திருமா தொகுதி மாறிக்கூட

போட்டியிடாத ராமதாஸின் தமிழ் தேசிய உணர்வினை இன்னும் நம்புவார் என்று நினைக்க முடியவில்லை. ஈழத்தமிழர் பிரச்சினையினை தேர்தல் பிரச்சினையாக வைக்க

இனி ஜெயலலிதாவை தவிர யாரும் இல்லை என்னும் நிலையைத்தான் உருவாக்கி வைத்திருக்கின்றனர். யாரிடம் தமிழர்கள் தங்கள் தேசிய உணர்வினை வெளிப்படுத்த வேண்டுமோ

அவர்கள் சொல்லுவதற்கு இனிமேல் கட்டுபட்டு நடப்பதாக உறுதிக்கூறிய பிறகுதான் அண்ணன் தங்கை பாசமே மலர்ந்திருக்கின்றது. கருணாநிதியிடம் இப்படி ஒரு உறுதியை

ராமதாஸ் தரவில்லையோ. சரி அடுத்த சட்டமன்ற தேர்தலில் மறக்காமல் கருணாநிதி ராமதாஸிடம் இவ்வுறுதிமொழியை வாங்கிவிடுவாராக.

அதிமுக கூட்டணியில் முதன்மைக் கூட்டாளியாக இருந்த மதிமுக இப்போது என்னவாக இருக்கின்றது? தாங்கள் கேட்ட எண்ணிக்கையில் சட்டமன்ற தொகுதிகளை திமுக தரவில்லை

என்பதற்காக கடந்த தேர்தலில் திமுக மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வெட்டுருக்களைக்கூட மறந்துவிட்டு இரவோடிரவாக அதிமுக அன்புச்சகோதரியின் கூடாரத்திற்குப் போன

வைகோ இப்போது தன்மான உணர்ச்சியினை எங்கு வைப்பார்? இப்போதுதான் உள்ளே வந்த பாமக விற்கு ஏழு தொகுதிகள் ஒரு மக்களவை என்றும் எந்தெந்த தொகுதிகள்

என்றும் முடிவாக்கப்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கும் அண்ணனுக்கு தயாராக தட்டில் சீட்டுகளை வைத்திருக்கும் சகோதரிக்கு கூடவே இருந்த சின்ன அண்ணன் இன்னும்

போயஸ் தோட்ட சமையலறையின் வாசலில் நிற்பது தெரியாமலே இருக்கின்றது.சட்டமன்றத்தில் எதற்காக வருகிறோம் என்று தெரியாமலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளியே

வந்த உடனே அந்தக் கட்சி உறுப்பினர்களைப்போலவே வெளியே வந்த மதிமுகவுடன் இன்னும் பேச்சுவார்த்தையே முற்றுப்பெறவில்லை. கேட்பது எத்தனை கிடைப்பது எத்தனை என்பதனை

உணர்ச்சிப் பெருக்கோடு வைகோ சொல்வார் என எதிர்பார்க்கலாம்.

பொதுவுடைமை தோழர்கள் காங்கிரஸ் சீனாவுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்திருப்பார்கள் என்றால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினையே கிடையாது. நந்திகிராமில்

விவசாயிகள் மீது அவர்கள் நடத்திய தாக்குதல்தான் நமக்கு ஞாபகம் வந்து தொலையுதே. அவர்களும் சீட்டுக்காகத்தான் இந்த ஆட்டத்தையும் ஆடுகிறார்கள்.அதுமட்டுமல்ல

எனக்கு திடீரென்று இப்போது இன்னொரு பிரச்சினை நினைவுக்கு வருகிறது. மதுரை உத்தபுரத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவரை இடிப்பதற்காய் பாடாய் பட்டவர்கள்

அப்போது அதைகுறித்து எந்த ஒரு வார்த்தையும் சொல்லாத ஜெயலலிதா இப்போது எப்படி தோழர்களின் பிள்ளை சமூக எதிர்ப்பை அல்லது தலித் அல்லாத மக்களின்

எதிர்ப்பை தாங்கிக்கொள்வார்? தோழர்கள் இதைகுறித்து எதுவும் பேச மாட்டார்கள் என்று கருதுகிறேன். இருக்கட்டும்.

திமுக கூட்டணி திமுக 21 காங்கிரஸ் 16 விடுதலைச் சிறுத்தைகள் 2 முஸ்லிம் லீக் 1. பீகாரில் காங்கிரஸுக்கு ஒதுக்கப் பட்ட இடங்கள் வெறும் மூன்று. முக்கிய மந்திரியாக

மத்திய அரசில் அங்கம் வகித்த லாலு ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரஸின் பலத்தை தீர்மானித்து தந்தவை. 80 இடங்கள் உள்ள உத்திரப் பிரதேசத்தில் காங்கிரஸ்

கட்சி ஆட்சியிலிருந்து இறங்காவண்ணம் காத்த கண்ண பரமாத்மா முலாயம் சிங் தர முன்வந்ததோ வெறும் 15 இடம். வடமாநிலங்களிலேயே இவ்வளவு பலவீனப்பட்ட

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 40க்கு 16 ஏன்? அவ்வளவு பலம் உள்ளதா காங்கிரஸ் கட்சி. எத்தனை பேர் இருக்கின்றார்களோ அத்தனைப்பேருக்கு ஒரு கோஷ்டி இருக்கின்றது

தொகுதிக்குப் பிறகு வேட்பாளர் தேர்வுக்குப்பின் பாருங்கள் காங்கிரஸ் வேட்பாளரை காங்கிரஸ் காரர்களே தொகுதிக்குகுள் விடமாட்டார்கள். அத்தகைய ஒற்றுமை வலிமை

கொண்டது. கட்சிக்குள்ளே ஒற்றுமையில்லாத காங்கிரஸ் நாட்டு ஒற்றுமைப் பற்றி என்ன செய்யமுடியும்? அதுவும் தமிழ்நாட்டில் தனித்து காங்கிரஸ் நிற்குமே என்றால்

கட்டுத்தொகையினை இழக்கும் கட்டாயம் அதற்கு வரும். அப்படியிருக்க ஏன் இத்தனை இடங்களை திமுக ஒதுக்கவேண்டும். தன்னுடைய ஆட்சியைக் காக்க பலமில்லாத

காங்கிரஸுக்கு இப்படி வாரி தருவது எப்படி நியாயம். தன்னுடைய பலத்தை விட காங்கிரஸ் அதிக பதவி சுகத்தை அனுபவிப்பது தமிழகத்தில்தான். அதுவும் தமிழர்களின்

உணர்வுகளுக்கு எதிராக இருந்துக்கொண்டே.

தொண்டர் பலமுள்ள கட்சி என்று பார்த்தால் திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக இருப்பது விடுதலைச் சிறுத்தைகள் தான். ஆனால் அதற்கு இரண்டே இடங்களைத்தாம்

ஒதுக்கியிருக்கிறார்கள். இதுகூட திருமாவளவனின் அளவு கடந்த பொறுமையினால் கிடைத்தது. அவரின் வழக்கமான உணர்ச்சிவசப்படும் தன்மையினை இந்த முறை

கொஞ்சம் ஒதுக்கிவைத்ததால் வந்தது. திருமாவளவனின் உண்ணாவிரதம் அவரை பொதுத்தலைமைக்கும் அதுமட்டுமல்ல தமிழ்தேசிய அரசியலை முன் இழுக்கும் தலைமையும்

அவருக்கு வந்து சேர்ந்தது. ஆனால் இந்த கூட்டணி அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ்தேசிய அரசியல் தொடங்கிய அவரின் போக்கு தலித்

தோழமைகளை இழந்து நிற்கிறது.கூடவே இருப்பார் என்று கருதப்பட்ட ராமதாஸ் இப்படி மீண்டும் தன் சுய சாதிக்குள்ளேயே அமுங்கிவிடுவார் என்பதை திருமாவளவன்

அறியவில்லை.

இத்தனை கூத்துகளும் அரங்கேறும் இடமாக தமிழக அரசியல் இருக்கின்றது. இதில் தமிழ் சார்ந்த அடையாளமோ தமிழ் அரசியலோ இல்லை என்பது தான் உண்மை. வேறு

எந்த தேசிய இனத்திற்கும் இல்லாத கொடுமை இது. தன் தேசிய தன்மை இல்லாமலே தங்களை ஆளுபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் அந்த இனம் பங்கேற்பது.

 

 

சிலம்பு

ஏதோ நடிகர் சிலம்பரசனைப் பற்றி என்று கருத வேண்டாம். அய்ம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரம் குறித்து பேசவேண்டி இருக்கிறது. ஏனென்றால் அது எழுதப்பட்ட காலத்தில் அப்படி ஒரு காப்பியம் உலகில் வேறு எந்த மொழியிலேயும் எழுதப்படவில்லை. இலியட் போன்ற காப்பியங்கள் இருந்திருக்கலாம். ஆனால் அவை மன்னர்களைப் பற்றியும் போரை முன்வைத்தும் இருக்கும். ஆனால் சாதாரண ஒரு குடும்பத்தலைவனையும் தலைவியையும் கதைத்தலைமையாக வைத்து எழுதப்பட்ட காப்பியம். தமிழ் மக்களின் பண்டைய பண்பாடு கலைகளில் அவர்களின் ஈடுபாடு ஆகியவற்றை நம்மால் நன்கு உணரமுடியும்.

நான் அதைபற்றி இங்கே கதைக்க வரவில்லை. சிலம்பு எழுதப்படுவதற்கு மூன்று காரணங்கள் கூறப்படுகின்றன

1. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

2.உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்

3. ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்

பின் கூறப்பட்டுள்ள இரண்டும் தனிமனித வாழ்வு சம்மந்தப்பட்டவை.  ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.அவரின் பண்பு நலன்,உடல்நலன் சார்ந்தது அது.அல்லது தேவையை சார்ந்தது.

ஆனால் முதலில் கூறப்பட்ட கருத்து சமூகம் சார்ந்தது. சமூகத்தின் இயல்பு என்பது பிழை செய்யக் கூடாததாக பிழை செய்யக்கூடியவர்கள் சமூகத்தலைமை ஏற்கக்கூடாதவர்களாக இருக்கவேண்டும். அரசியல் என்பதை நவீன யுகத்தில் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். அதையும் தாண்டி அது சமூகத்தை ஆள்பதாக வழிநடத்தக் கூடியதாக முன்னிகழ்வுகளை நிகழ்த்த தக்கதாக இருக்கும் காரணத்தால் அரசியல் பிழை நேராமல் இருத்தல் என்பது சமூகக்  கடமையாக கருத்தப்பட்ட பண்பாட்டு பயன்பாடு மிக்கதாக ஒரு சமூகம் இருக்க வேண்டும் என்பதன் உயர்ந்த எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எத்தனிப்பு தமிழ் சமுகத்திற்கு இருந்திருக்க வேண்டும்.

ஆனால் இப்போது பாருங்கள் அரசியல் என்பதே பிழை செய்யும் இடமாக அல்லவா இருக்கின்றது. அதுமட்டுமல்ல செய்யப்படுகின்ற பிழைகள் அத்தனையும் அரசியலையே மையமாக வைத்தல்லவா செயல்படுகின்றது. எல்லாம் ஓட்டுக்காக தேர்தலுக்காக என்றே சொல்லபடுகின்றது. தேர்தல் என்பது தவறில்லாமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்னும் போது இந்த ஜனநாயகம் எதை நமக்கு தருகிறது என்பதை நாம் உற்று நோக்கவேண்டும்

அரசியல் சதுரங்கம்: ஆட்டமிழக்கும் அறம்

பா.ம.க. தன்னுடைய பொதுக்குழுவில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த முடிவை பெரிய ஜனநாயகத் தன்மையுடையதாகக் காட்டிக்கொண்டு ஓட்டுப்போட்டு அணி மாறியுள்ளது. மிகவும் தனித்தன்மையுடன் அல்லது ஆய்வின் அடிப்படையில் இயங்கும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி தன்னை மாற்றிக்கொண்டு வருகிறது என்றா நம்பிக்கையினை அது மீண்டும் மண் போட்டு புதைத்துவிட்டது.

எந்த விதத்திலும் திமுகவின் தன்மைக்கு குறைந்ததல்ல அதிமுக. அதன் தலைமை அடிக்கும் அரசியல் கூத்துகளுக்கு ஈழத்தமிழர் பிரச்சனைக்கூட பொருட்டில்லைதான். இவ்வளவு நாள் எதிர் நிலையிலிருந்துவிட்டு தேர்தல் நெருங்க ஈழத்தமிழர் பிரச்சினை  ஒரு வேளை தமிழர்களின் ஓட்டுகளை மாற்றிவிடுமோ என்று செயலலிதாவின் அரசியல் ஆலோசகர் ஒருவேளை அது தா.பா அல்லது வைகோ வாக கூட இருக்கலாம் சொல்லிவிட அவரும் ஈழத்தின் பிரச்சினை தீர மத்திய அரசை அவர் வழக்கமாக வசாடும் மாநில அரசைக் கண்டித்து ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

ஈழத்தமிழர் பிரச்சினைதான் இந்த தேர்தலில் தமிழர்களால் முக்கியமானதாக முன்வைக்கப்படும் என்று யார் சொன்னார்கள்? தமிழர்கள் என்ன அவ்வளவு கொள்கைரீதியாக சிந்திக்க கூடியவர்களா? பாவம் அவர்கள். அதைத்தான் இவர்கள் எல்லாம் இலாவகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். எங்கிருந்து பேசினால் என்ன எதை பேசினால் என்ன எப்படி பேசினால் என்ன எல்லாம் ஓட்டுக்காகத்தான் என்பதை ஒவ்வொரு தேர்தலிலும் ராமதாஸ் நிறுவிவருகிறார். அவரின் தேர்தல் உத்தி என்று இதை யாராவது சொல்வார்களேயானால் அதற்கு வேறு ஏதாவது சொற்களைத்தான் தேட வேண்டும். காத்திரமாக அல்ல மிகவும் நிதானமாக அவதானித்தே இதைச் சொல்வோம். இவ்வளவு காலம் ஈழத்த்மிழர் பிரச்சினையில் மற்ற தமிழ்தேசிய தன்மையுள்ள இயக்கங்களுடன் கலந்து  போராடி தமிழ்    அடையாளத்துடன் உலகளவில் தன்னையும் தமிழர்களைக் காக்கும் தலைவராகக் காட்டிக்கொண்டு  அரசியல் நடத்திய ராமதாஸ் இப்போது அதை மிகவும் லாவகமாக கைவிட்டார். பொதுக்குழுவில் ஓட்டெடுப்பு நடத்தி இதைச் செய்ததாக மக்களுக்கு அறிவிக்கிறார். என்ன இது? கட்சி மாறுவது என்பது ஏற்கெனவே எடுத்த முடிவு என்று மக்கள் தெரிந்து வைத்திருக்கின்ற ஒன்றை இவர் அறியாததைப் போலவே நடந்துகொள்வது என்பது நாடகமின்றி வேறென்ன இருக்க முடியும்.

காங்கிரஸை விட்டு அவர் வரவில்லை. திமுகவை விட்டுதான் வந்திருக்கிறார். பிரதமர் மன்மோகனுக்கும் சோனியாவிற்கும் கடந்த அய்ந்து ஆண்டுகளாக ஒத்துழைப்பு தந்தமைக்கு நன்றி கூறுகிறார். அப்படி கொடுக்கப்பட்ட ஒத்துழைப்பு என்பது பரஸ்பரமானது தானா? தமிழர்களுக்கு எதிரான ஆய்த நடவடிக்கைகளிலும் இந்த ஒத்துழைப்பு இருந்திருக்குமா? நாம்  மிகவும் மதித்த ராமதாஸ் அவர்களுக்கு மட்டுந்தான் தெரியும் இது. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையினை செவ்வனே செய்வதற்கு இன உணர்வும் மான உணர்வும் தேவையில்லை. அடிமைத்தனம் இருந்தால் போதுமானது. டில்லியில் இருந்த ஒரு நாளில் கூட ஈழத்தமிழருக்காக அன்புமணி ஒரு போராட்டத்தையும் மத்திய அரசை எதிர்த்து நடத்தவில்லை. மாறாக நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். பீகார் மக்கள் மும்பையில் தாக்கப்பட்டபோது லாலு அவர்கள் செய்த கிளர்ச்சியினை நாம் சிந்திக்க வேண்டும். அதுமட்டுமல்ல காங்கிரஸின் அநீதியைக் கண்டித்து இந்த கூட்டணியில் இடம் பெறவில்லை பாமக. திமுகவைவிட எந்த விதத்தில் அதிமுக நல்லது என்பதையும் தமிழருக்கு சொல்லி அதன் மூலம் அந்த கூட்டணியில் இடம் பிடிக்கவில்லை. சரி, ஈழத்தமிழர் பிரச்சினையை முன்வைத்தா? அல்லது சேது சமுத்திர திட்டத்தினை முன்வைத்தா?அல்லது உயர் மருத்துவம் தொழில்நுட்ப படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டபோது அதை எதிர்த்து பாமக நடத்திய போராட்டத்திற்கு செயலலிதா ஆதரவு தந்தார் என்பதற்காகவா?

எதுவுமே மருத்துவர் ராமதாஸுக்கோ அல்லது அக்கட்சியின் முன்னணியினருக்கோ தெரியாது.பிறகு எப்படி என்கிறீர்களா? பொதுக்குழுவில் அவருடைய கட்சியினர் ஓட்டு போட்டனர் அதனால்தான்.

இங்கே தான் நமக்கு சந்தேகமே ஆரம்பமாகிறது. சந்தேகமே இல்லாமல் அது மார்க்ஸ் சொன்ன சந்தேகம் தான். பாமக என்பது இன்னும் முழுமையான பொதுவான கட்சியாக இல்லை. அப்படி பொதுவான கட்சியாக இருக்கும் பட்சத்தில் அதன் பொதுக்குழுவில் ஓட்டளித்தவர்கள் எத்தனைப்பேர் வேறு சாதியினர் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தேர்தல் அற்ற காலங்களில் அவர் பொதுவான தமிழர்களை வைத்துக் கொள்வார். அதற்கு அத்தாட்சியாக ஒரு தொலைக்காட்சியும் செய்தித்தாளும் இருக்கும். அதில் தமிழ் தேசியவாதிகள் தமிழ் அறிஞர்கள் பனியாளர்களாக இருப்பார்கள். இசை குறித்தும் தமிழ் வளர்ச்சிக் குறித்தும் ஊடக வளர்ச்சிக்குறித்தும் படைப்பாளிகள் சங்கம் குறித்தும் தன்னுடைய ஊடகத்திற்கு போதுமான விளம்பரம் பெறுவது குறித்தும் பெரிதும் அவர் விவாதிப்பார். கல்வி குறித்து விவாதிக்க கல்வியாளர்களையும் அழைப்பார். உண்ணாவிரதம் இருந்து திருமாவளவன் போராடினால் ஓடிவந்து குளிர்பானம் கொடுத்து அவருடைய போராட்டத்தை முனைமழுங்க செய்வார். இதெல்லாம் செய்துவிட்டு தேர்தல் என்று வந்தால் இவர்களிடையே  கருத்துக்களைக் கேட்காமல் தன் கட்சியின் பொதுக்குழுவில் தஞ்சம் அடைவார். அவர்கள்தான் வேலை செய்யப்போகிறவர்கள். யார் அவர்கள் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல சாதிக்காரர்கள். தன்னுடைய சாதி என்னும் குறுகிய வட்டத்திற்குள் அவர் சென்றுவிடுவது வாடிக்கையாக இருக்காது. அது வழக்கமானது. தமிழ் அறிஞப் பணியாளர்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

ஈழப்பிரச்சினையில் கருணாநிதிக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றதோ அவ்வளவு பொறுப்பு ராமதாஸுக்கும்தான் இருக்கிறது. அதிகாரத்தின் போதையை கடைசி சொட்டுமட்டும் சுவைத்து விட்டு இன்று பரிசுத்த ஆவியால் துடைக்கப் பட்டவர்களைப் போல அவர்கள் மாறியிருக்கிறார்கள். தமிழருக்கும்,தமிழ்தேசியத்திற்கும் பகுத்தறிவுக்கும் எவ்வளவு காங்கிரஸ் விரோதியோ அதைவிட பன்மடங்கு விரோதி செயலலிதா.அவரின் இந்துத்த தன்மை வெளிப்ப்டையானது. யாருக்கும் எதற்கும் அஞ்சாதது. அடுத்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஒரு வேளை பாஜகவுக்கு வருமேயானால் இப்போது கூட இருக்கும் நட்புகளை விட்டுவிட்டு சென்று விடுவதற்கு அவருக்கு தயக்கமே இருக்காது. எங்கே பிராமணன் என்று சோவை விட்டு ஜெயா தொலைக்காட்சியில் வருவது இன்னும் சில நாட்களில் மக்கள் தொலைக்காட்சியில் வந்தால் பாவம் தமிழ்ப்பண்ணையில் சந்திப்பிழைகளுக்கெல்லாம் சண்டை போடும் நன்னர்கள் என்ன செய்வார்களோ?இதைவிட முக்கியமான அக்கறை நமக்கொன்று உண்டு திருமாவளவன் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அது.

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!